செய்திக் குறிப்புகள்

இரத்ததானம் செய்தார் விஜயசேதுபதி

திரைப்படத்துறையில் உள்ள சண்டைப்பயிற்சிக் கலைஞர்களுக்காகத் தொடங்கப்பட்டது ஸ்டன்ட் யூனியன். இது தொடங்கப்பட்ட 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக இன்று (ஏப்ரல் 17,2018) கொண்டாடப்பட்டது.

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தியது. அதில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஏராளமான உறுப்பினர்கள் இரத்த தானம், கண் தானம் செய்தனர்.

விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது..

இரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்றார்.

கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுபினர்கள் அனைவருக்கும் அளித்தார்.

விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது,

படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ இரத்தத்தை நீங்கள் இழந்து கொண்டு இருகிறீர்கள், உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் இரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள் என்றார்.

விழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கௌரவிக்கப் பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.

விழாவில் ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரையாற்றினார் சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் எம்.செல்வம் பொருளாளர் சி.பி.ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.

விழாவில் விஜய்சேதுபதி கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

Related Posts