சமூக இடைவெளி மனிதருக்குள் மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ? – விஜய்மில்டன் அச்சம்
கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது….
சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது.
மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்.
ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..புடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம் போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக்கொண்டிருக்கிறோம்.
சகமனிதர்களை – ஏன் -நண்பர்களைக் கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது.
இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வதுதான் social responsibility என அவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது.
இவ்வாறு விஜய்மில்டன் கூறியுள்ளார்.