விக்னேஷ் சிவன் இனியாவது திருந்துவாரா ?
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர்.
படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக வில்லனிடம் கேட்கிறார். ” சார், வாயில வைக்கிறதுனா புரியலையே சார் என மூன்றாம் முறை கேட்க, ‘அடப்பாவிகளா’ என படம் பார்க்க வந்த பெற்றோர் எல்லாம் அவமானத்தால் தலையைப் புதைத்து கொள்ள, ஏதோ ஒரு சீட்டிலிருந்து ஒரு சிறுமி மெல்லிய குரலில், “தாத்தா, வாயில வைக்கிறதுன்னா என்ன தாத்தா ? ” என கேட்டாள். பார்வையாளர்களிடத்தில் மயான அமைதி. பல அம்மாக்கள் தலையைக் கவிழ்ந்து கொண்டனர்.
அந்த சிறுமியின் தாத்தாவை ஒரு நொடி நினைத்துப் பார்த்தேன். அக்கேள்வியை அவர் எப்படி கடந்திருப்பார்? ஒருவேளை அதிர்ச்சியில் அழுதிருப்பாரோ ? நிச்சயம் கோபத்தில் மனதிற்குள் குமுறியிருப்பார், என்னடா படம் எடுக்கிறீங்க! போனை ஒட்டு கேட்கிறதுக்குப் போய் தேவையே இல்லாம இவ்வளவு கீழ்த்தரமாவாடா வசனம் எழுதுவீங்க ‘தூ’ என்று துப்பியிருக்கலாம்.
இது போன்ற வசனங்களை, தொடர்ந்து தன் படங்களில் வைக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு, குடும்பத்தோடு படம் பார்க்க வருகிற பெற்றோரின் கஷ்டம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
யூத் ஆடியன்ஸை கவர்கிறேன் என்ற பெயரில் நானும் ரவுடி தான் படத்தில் கோத்தா கொம்மாளே என்று விஜய் சேதுபதியைச் சொல்ல வைத்து நயன்தாராவை ரோஜா பூமாலை என்று மொழி பெயர்க்க வைத்தவர். இறுதிக் காட்சியில் உன்ன போடணும் என நயன்தாராவை சொல்ல வைத்து, எது என்ன போடணுமா, ஐயம் ரெடி என பார்த்திபனை கிளர்ச்சியடைய வைத்தவர்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக சூர்யாவையே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ஒரு வசனத்தை சொல்ல வைத்திருக்கிறார். துப்பாக்கியை நீட்டும் போலீசிடம் “ வயசானதுக்கப்புறம் இன்னும் என்ன சார் கைல புடிச்சி அசிங்கமா ஆட்டிட்டு இருக்கீங்க’ என்கிறார் சூர்யா.
குழந்தைகள் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க, கேட்ட வார்த்தைதான் பேசுவாங்க என உபதேசம் செய்த சூர்யாவா இதைப் பேசியது ?.
உண்மையில் இது பெரும் அதிர்ச்சி தான். உச்ச நட்சத்திரங்களின் வாயால் இந்த மாதிரி கீழ்தராமான வசனங்கள் வரும்போது மிக எளிதாக அது குழந்தைகளின் மூளையில் பதிந்து விடும். இது கிட்டத்தட்ட ஐஸ்க்ரீமில் விஷம் தடவிக் கொடுப்பது போலத்தான். பிள்ளைகள் வெள்ளந்தியாக உள்ளெடுத்துக் கொள்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் என்ற பெயரில் வரைமுறையே இல்லாமல் வழிந்தோடும் இவை எல்லாம் வக்கிரம்.
எந்த வித அவசியமும் இன்றி வலிந்து இம்மாதிரியான வசனங்களை, தொடர்ந்து தன் படங்களில் வெளிப்படுத்தும் விக்னேஷ் சிவன் ஒரு நல்ல இயக்குநரா என்ற கேள்வி எழுகிறது.
அவ்ர்தான் அப்படி என்றால், நயன்தாரா, சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட கேள்வியே கேட்காமல் மனதில் ஒரு சிறு குற்ற உணர்ச்சியும் இன்றி எப்படி இந்த வசனங்களைப் பேசுகிறார்கள் என்பதும் புரியவில்லை.
அடுத்தடுத்த படங்களில் விக்னேஷ்சிவன் இப்படி எழுதுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.