சூர்யாவின் வேண்டுகோளும் ரசிகர்களின் எதிர்வினையும்
நடிகர் சூர்யாவும்,நடிகர் கார்த்தியும் இணைந்து அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கிப் படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.
தற்போது இலவசக் கல்வி வழங்கத் தகுதியான ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் சூர்யா கூறியிருப்பதாவது….
ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாகத் துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.
இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்கள் அகரம் அறக்கட்டளையைத் தொடர்புகொள்ளலாம்
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பில் கருத்துச் சொல்லும் பலரும் சூர்யாவைப் புகழ்கின்றனர். அவற்றில் ஒன்று…..
கைவிடப்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு #அகரம் மூலம் கல்வி கொடுக்கும் எங்களின் காமராஜரே.
கைவிடப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உழவன் மூலமாக உதவிக்கரம் நீட்டும் எங்களின் கர்ணனே.
உங்களின் தம்பிகள் என்று நாங்கள் கூறுகையில் எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது அண்ணா