அனிருத் இசையில் பாடலாசிரியரானார் சிவகார்த்திகேயன்
நயன்தாரா நாயகியாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என்ற முதல் பாடல் காணொலி, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களை கவுதம் மேனன் பேசியிருப்பார்.
இந்நிலையில், ‘கல்யாண வயசு…’ என்ற இரண்டாவது பாடல் காணொலி, வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்று அறிவித்துள்ளார் அனிருத். அத்துடன், இந்தப் பாடலின் மூலம் முதன்முதலாக ஒருவர் பாடலாசிரியராக மாறியிருக்கிறார் என்று சொல்லி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தார்.
இப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் தான் அந்தப் பாடலாசிரியர் என அறிவித்துள்ளனர். நயன்தாராவுடன் இணைந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் மறுபடியும் அவருடன் ஜோடி சேர இருக்கிறார். இந்நிலையில், அவருக்காகப் பாடல் எழுதியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.