இயக்குநர் சுந்தர்ராஜன் குறித்து ரஜினி ரசிகர்கள் வதந்தி பரப்பியது ஏன்?
நேற்று இயக்குநர் ஆர் சுந்தரராஜன் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மிக வேகமாக சமூகவலைதளங்களில் இச்செய்தி பரவியது. அந்நேரம் பலர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கின்றனர். அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் இச்செய்தி உண்மையா? எனப்பலரும் வினவத் தொடங்கினர்.
இந்த வதந்தி எதனால் என்பதற்கும் அவர் ஏன் கைபேசியை எடுக்கவில்லை என்பதற்கும் விடை கிடைத்துள்ளது.
அண்மையில் அவர் பேசிய பேச்சில்,நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து ஒரு ஊரில் பேசிவிட்டு மற்றொரு ஊருக்கு வருவதற்குள் அவர் இறந்து விடுவார்.அவருடைய உடல் நிலை குறித்து எனக்குத் தெரியும் என்று பேசினாராம்.
இதற்குப் பதிலடியாக ரஜினி ரசிகர்கள்தாம் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டார் என்கிற வதந்தியை வேகமாகப் பரப்பத் தொடங்கினராம். அதோடு சுந்தராஜனின் கைபேசி எண்ணைப் பதிவிட்டு, இந்த எண்ணில் அழைத்து அவனைத் திட்டித்தீருங்கள் என்று சொல்லியிருந்தனராம்.
அதனால் அவருக்கு ஏகப்பட்ட கைபேசி அழைப்புகளாம். தொடக்கத்தில் கைபேசியை எடுத்திருக்கிறார், அப்போது அவரைத் தகாத சொற்களால் ரஜினி ரசிகர்கள் திட்டினராம். அதன்பின் அவர் கைபேசியை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதனால் வதந்தி இன்னும் வேகமாகப் பரவியதால் அவருடைய மகன் அசோக், இது வதந்தி அப்பா நலமாக இருக்கிறார் என்று சொன்னார். அதன் காரணமாக அதற்கு முற்றுப்புள்ளி வந்தது.
சுந்தர்ராஜன் பேசியது தவறு அதற்கு எதிர்வினையாக ரஜினி ரசிகர்கள் செய்ததும் தவறு என்று பலரும் கருத்து சொல்கிறார்கள்.