குளறுபடி செய்யும் சங்கம் தவிக்கும் இயக்குநர்கள் – ஆர்.கே.செல்வமணி சரி செய்வாரா?
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களைத் தயாரிக்கிறது. இதனை இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இயக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா ஏப்ரல் 20,2022 அன்று நடந்தது.
அவ்விழாவில் பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது…..
இயக்குநர்கள் சங்கத்தில் 2500 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பட வாய்ப்பு பெற்றுத் தரும் முயற்சியாக பெங்களூரு இனோவேட்டிங் பிலிம் அகாடமியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
முதல்கட்டமாக 195 கதைகள் கேட்கப்பட்டு அதில் 52 கதைகள் படமாக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10 கதைகள் முதல்கட்டமாக படமாக்கப்பட இருக்கிறது. படிப்படியாக மற்ற படங்களும் தயாராகும். 40 விழுக்காடு சம்பளமாகவும், 60 விழுக்காடு படத் தயாரிப்புக்கும் செலவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறோம்.
இயக்குநர் சங்கம் தவிர தமிழ் சினிமாவில் உள்ள மற்ற சங்கத்தில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படப் போட்டி ஒன்றை நடத்துகிறோம். இந்தப் போட்டியில் மற்ற சங்க உறுப்பினர்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு குறும்படத்தை இயக்கித் தரவேண்டும். இதில் இயக்குநர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம். குறும்படம் தயாரிப்புக்குத் தேவையான கேமரா உள்ளிட்ட உபகரணங்கள், மற்றும் நிதி சங்கத்தின் சார்பில் அளிக்கப்படும்.
இந்தப் படங்களைக் கொண்டு ஒரு குறும்பட விழாவை நடத்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் நாசர், நடிகை அர்ச்சனா, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், எடிட்டர் லெனின் ஆகியோர் நடுவர்களாக இருந்து பரிசுக்குரிய குறும்படங்களைத் தேர்வு செய்வார்கள். இதில் தேர்வாகும் முதல் 3 படங்களை திரைப்படமாக தயாரிப்போம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அவ்விழாவில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, செயலாளர் மன்னன், நடப்பு தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு, துணை தலைவர் ரவிமரியா, பெங்களூரு இனோவேட்டிவ் பிலிம் அகாடமி தலைவர் சரவண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏப்ரலில் நடந்த இவ்விழாவுக்குப் பிறகு இதை முழுமையாக நம்பி நான்கு பேர் குறும்படங்களை இயக்கத் தொடங்கினார்களாம்.
இயக்குநர்கள் சங்கம் கொடுப்பதாகச் சொன்ன கேமிராவில் படம்பிடித்தால் படம் சரியாக வராது என்பதால் அவர்களே தகுதியான கேமிராவை வாடகைக்கு எடுத்துக் குறும்படமெடுத்திருக்கிறார்கள்.
அதேசமயம், ஒரு குறும்படத்துக்கு சுமார் ஒரு இலட்சம் கொடுக்கிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதைநம்பி,சிலர் சொந்தப் பொறுப்பில் குறும்படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். படத்தை முடித்துக் கொடுத்தால் உடனே இயக்குநர்கள் சங்கத்திலிருந்து பணம் வந்துவிடும் என்று சொல்லிப் பலருக்கு ஊதியம் மற்றும் பொருட்களுக்கான வாடகை உள்ளிட்டவற்றைக் கொடுக்காமல் படமெடுத்திருக்கிறார்கள்.
படத்தை எடுத்து முடித்த பின்பும் இயக்குநர்கள் சங்கத்திலிருந்து பணம் தரப்படவில்லையாம். இதனால் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இப்போது நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
அறிவித்தபோது நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தில் இப்போது நடக்கும் குளறுபடிகளால் சம்பந்தப்பட்டவர்கள் நொந்துபோயிருக்கிறார்களாம்.
இந்தத் திட்டம் சரியாக நடக்க ஆர்.கே.செல்வமணி ஆவன செய்வாரா? என்கிற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.