சினிமா செய்திகள் நடிகை

எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது – ஓவியா வெளிப்படைப் பேச்சு

அனிதாஉதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கத்தில், ஓவியா நடித்திருக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாசக் காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்பட முன்னோட்டம் வெளியானதிலிருந்து ஓவியா மீது கடும் விமர்சனங்கள் வருகின்றன. அவை பற்றி ஓவியா கூறியிருப்பதாவது…..

இந்தப்படத்தில் மாடர்னாக நடித்திருக்கிறேன். பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதைக் கொடுப்பது என் கடமை.

உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன கேட்டதோ, அதைத்தான் செய்து இருக்கிறேன்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. சினிமா தியேட்டர்களில் புகை பிடித்தால் என்ன வரும்? என்பதைப் பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்.

ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை.

சினிமா, பொழுதுபோக்கு சாதனம். அதில், பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டுவதில் தப்பு இல்லை. எனக்கென்று ரசிகர்கள் ஒரு இடம் வைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். இது, ஜாலியான படம். பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது என்ற கருத்து இந்தப் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ஓவியா கூறியுள்ளார்.

Related Posts