மகாமுனி – திரைப்பட விமர்சனம்
மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி.
மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால் முனி.
கொஞ்சம் கூட உடல் அசையாமல் மகா பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. ஒவ்வொரு புடவையையும் தேடித்தேடிப் பார்த்து தடவித்தடவி ரசித்துத்தானே எடுக்கிறே. அப்புறம் எப்ப அது பிடிக்காம போகுது? என்று மனைவி இந்துஜாவிடம் கேட்கும்போது திரையரங்கம் சிரிப்பால் அதிர்கிறது.
முதுகில் கத்திக்குத்தோடு, என்னைப் புரிஞ்சிக்கோ விஜி என்று கெஞ்சும் காட்சியில் வேலைக்குப் போகும் கணவர்களின் பரிதாப நிலையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்யா.
முனியாக நடித்திருக்கும் ஆர்யாவின் வாழ்க்கை, எல்லோருக்கும் நல்ல பாடமாக அமைந்திருக்கிறது.
மகாவின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா, நன்றாக நடித்து கன்கலங்க வைக்கிறார்.
முனியின் தோழியாக வரும் மகிமாவின் பாத்திரப்படைப்பு சிறப்பு. பொருத்தமாக நடித்து அதற்கு வலுச் சேர்த்திருக்கிறார் மகிமா.
அரசியல்வாதிகளாக வருகிற இளவரசு, சூப்பர்குட் சுப்பிரமணி ஆகியோரை வைத்து தற்கால அரசியல்வாதிகளைக் கிண்டலடித்திருக்கிறார்கள்.
ஜெயப்பிரகாஷுக்கு முக்கியமான வேடம். அவரும் ஓடியாடி நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் கவனிக்க வைக்கிறார். மிகப்பெரிய கொடுமைகளை அசராமல் செய்கிறார். அந்நேரங்களில் அவருடைய உடல்மொழி மிகப்பொருத்தம். அதற்கு நேர்மாறாக நம்பிக்கைதான் சந்தோஷந்தான் சமாதானந்தான் என்று சொல்லி குலுங்கிச் சிரிக்கிறார். நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கு சொந்த மனைவி குறித்து அவர் சொல்லும் செய்தி சிரிப்பில் அதிர வைக்கிறது.
தமன் இசையமைத்திருக்கிறார். படத்தால் அவருக்குப் பலம்.
அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு நன்று. சென்னையின் இருண்மையும் ஈரோட்டின் செழுமையும் அழகாகப் பதிவாகியிருக்கிறது. இறுதியில் ஆர்யா நீச்சலடித்துச்செல்லும் காட்சி ஓர் அழகிய கவிதை.
சேக்கிழார் கம்பராமாயணம் போன்ற வசனங்களில் ச்மகால அரசியலைச் சாடியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். பிரியாணி அண்டாவைத் தூக்கிச் செல்வது, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது நண்பரின் உரையாடல் உட்பட பல குறியீடுகளில் ஆதிக்க அரசியலை விமர்சித்திருக்கிறார்.
மகிமாவை அப்பா வலுக்கட்டாயமாக அழைக்கும் நேரத்தில் அதிரும் பறையிசை பல கோபங்களை வெளிப்படுத்துகிறது.
நீ என்கிட்ட வராம வேற யார் கிட்டயாவது போயிருந்தா நல்லா இருந்திருப்பியோ என்னவோ? என்று ரோகிணி ஆர்யாவிடம் பேசும் காட்சி மிக ஆழமானது.
சென்னை பேச்சு வழக்கு, கொங்கு பேச்சு வழக்கு மற்றும் நடைமுறைகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார்.
அழகான படம் ஆழமான படம். ஆர்யா நல்ல நடிகர் என்பதைப் பறைசாற்றும் படம்.