மாநாடு அதிகாலைக்காட்சி – சொல்லி அடித்த சிம்பு இரசிகர்கள்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணிபிரியதர்ஷன் உட்பட பலர் நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ்காமாட்சி தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
சென்னையில், நவம்பர் 25 அன்று அதிகாலை 5 மணிக்கே படம் திரையிடப்படவிருக்கிறது.
இதற்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு நவம்பர் 20 அன்று தொடங்கியது.
கோயம்பேடு ரோகிணி, போரூர் ஜிகே சினிமாஸ் உட்பட சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கியதும் எல்லோரும் வியக்கும் வண்ணம், எல்லாத் திரையரங்குகளிலும் எல்லாச் சீட்டுகளும் விற்பனையாகிவிட்டதாம்.
கோயம்பேடு ரோகிணி வளாகத்திலுள்ள 6 அரங்குகளிலும் 2058 சீட்டுகளும் விற்பனை ஆகிவிட்டதாம்.
இந்தப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். அவற்றைத் தாண்டி படம் வெளியீடுவரை வந்திருக்கிறது.
சிலநாட்கள் முன் நடந்த நிகழ்வில், தொடர்ந்து எனக்குப் பல சிக்கல்கள் தருகின்றனர் என்ச் சொல்லி கண்கலங்கினார் சிம்பு.
அப்போது, பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இரசிகர்களை நோக்கிச் சொன்னார் சிம்பு.
அவருக்கு தெம்பூட்டும் விதமாக சிம்பு இரசிகர்கள் அரங்குகளை நிறைத்து அவருக்குப் பலம் சேர்த்திருக்கின்றனர்.