மும்பையில் தர்பார் படவிழா – ரஜினி கலந்து கொண்டது ஏன்?
ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் தயாரான முன்னோட்டத்தை வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.அதில், ரஜினி கலந்துகொண்டு, தர்பார் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனக்கு போலீஸ் வேடமேற்று நடிக்கவே பிடிக்காது என்றார். எல்லோரும் ஸ்டைல்., ஸ்டைல் என்கிறார்கள். என்னிடம் எதை அவர்கள் ஸ்டைல் என்கிறார்கள் எனத் தெரியவில்லை என ரஜினி கூறினார்.
எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் எனக் கேட்டதற்கு திருநங்கையாக நடிக்க விருப்பம் எனக் கூறினார் ரஜினி. ஆதித்யா அருணாச்சலம் சோகமான கேரக்டர் என்றும் மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என்றும் ரஜினி கூறினார்.
அமிதாப்பச்சன் அரசியலில் நுழையாதே எனக்கூறினார் அதை என்னால் கடைபிடிக்க முடியவில்லை என்றும் ரஜினி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தர்பார் படத்தின் இந்தி உரிமையை ரஜினியின் முந்தைய படங்களை விட மிகக் குறைந்த விலைக்குக் கேட்பதாகச் சொல்லப்படும் நிலையில் மும்பையில் படத்தின் விளம்ப்ர நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டிருக்கிறார். இதனால் படத்துக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.