விஜய்சேதுபதி படத்தில் கசப்பான அனுபவம் – ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி மனந்திறந்த பேட்டி
2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘ஹெலன்’.அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார்.
அந்தப்படத்தை அன்பிற்கினியாள் என்கிற அழகிய தமிழ்ப்பெயரோடு தமிழில் எடுத்திருக்கிறார்கள்.கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன் கீர்த்திபாண்டியன் ஆகியோர் அப்பா மகளாக நடித்திருக்கும் அந்தப்படம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
படவெளியீட்டுக்குப் பின் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள மகேஷ் முத்துசாமியிடம் ஒரு பேட்டி….
1. அன்பிற்கினியாள் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள்..?
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்குப் பிறகு இயக்குநர் கோகுலுடன் இணையும் வாய்ப்பு இப்படத்தில் அமைந்தது.அருண்பாண்டியன் சார் நான் பணியாற்றிய நந்தலாலா படத்தின் தயாரிப்பாளர். அப்போது அவரைச் சந்தித்தது கூட இல்லை.இந்தப்படத்தில் நடிகராக அவரைப் பார்த்தேன். நடிகராக பல ஆச்சரியங்கள் கொடுத்தார்.கீர்த்திபாண்டியன் தியேட்டர் ஆர்டிஸ்ட். சினிமாவுக்குள் வந்ததும் இங்கு என்ன தேவையோ? அதைச் செய்தார். இய்க்குநர் சொல்வதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். மலையாள நடிகை அனபெல்லுடன் ஒப்பிடும் வாய்ப்பு உள்ளதை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்தார்.சப் இன்ஸ்பெக்டராக நடித்த ரவீந்திராவும் நன்றாகச் செய்திருந்தார்.
இந்தப்படம் போன ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. மார்ச்சில் லாக் டவுன் வந்தது. 4 நாள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது. அதை லாக் டவுனுக்குப் பிறகு படமாக்கினோம்.படம் வெளியான பிறகு நிறைய வரவேற்புகள்.
கோகுல் சாரின் மற்ற படங்களோடு ஒப்பிடும்போது இது வேறுமாதிரி படம். ஆனாலும் அவர், இந்தப்படத்துக்கு என்ன தேவையோ அதை ஒரு ஷாட் கூட காம்ப்ரமைஸ் பண்ணாமல் படமாக்கினார்.அதேபோல் போஸ்ட் புரொடக்ஷனிலும் இஞ்ச் பை இஞ்ச் நேர்த்தியாக இருக்கவேண்டுமென உறுதியாக இருந்தார். இதில் பணியாற்றியது எனக்கு முழுதிருப்தி.
2. மலையாளப் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கை எதிர்கொள்ள செய்த முயற்சிகள் என்னென்ன?
மலையாளத்தில் ஹெலன் பெரிய வெற்றி பெற்ற படம். நீட்டான மேக்கிங் இருந்தது. மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம். இப்படிப்பட்ட ஒரு படத்தை வேறு மொழியில் எடுப்பது கஷ்டமான விசயம்தான். ஒரிஜினலின் புனிதம் கெட்டுவிடாமல் தமிழுக்குத் தகுந்த மாற்றம் செய்யவேண்டும் என்பது கோகுலின் எண்ணம். அதனால் அங்கு இருந்த சில விசயங்களைத் தவிர்த்தார். சில இடைவெளிகளை நிரப்பினார். அதனால் படம் நிறைவாக அமைந்தது.
3.ஓர் அறைக்குள்ளே பெரும்பகுதிப் படப்பிடிப்பு நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் பற்றி..?
இது ஒரு சவாலான விசயம்தான். இதில் சாதகம் என்னவென்றால், ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது அந்த இடத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளமுடியும்.இடம் பழகிவிடும் என்பதால் லைட்டிங் உட்பட பல விசயங்கள் வேகமாகச் செய்யலாம்.
பாதகமெனப் பார்த்தால், ஒரே இடம் என்பதால் பார்வையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்க்க பல கோணங்கள் பல பரிணாமங்களில் ஷாட் வைத்தோம். அதனால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படவில்லை.
4.ஒரு காட்சியில் திரையில் தோன்றுகிறீர்கள். எப்படி நடந்தது?
மலையாளப்படத்தில் அந்தக் காட்சியில் படத்தின் இயக்குநரே இருப்பார். இங்கு கோகுல் வெறொரு வேடத்தில் நடித்ததால் இந்தக் காட்சியில் நீங்கள் இருங்கள் என்று கேட்டார். அது நடிப்பு கிடையாது சும்மா தோன்றுவதுதான் என்பதால் நான் அங்கே இருந்தேன்.
5. இயக்குநர் கோகுலின் முந்தைய படங்களிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்தக் கதையில் அவருடன் பணியாற்றியது எப்படியிருந்தது?
கோகுல் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து பல புதிய விசயங்களைச் சேர்ப்பார். ஆன் தி ஸ்பாட்டில் அவர் சொல்லும் மாற்றங்கள் சிறப்பாக இருக்கும்.நேரடிப் படம் எடுக்கும்போது இந்த சுதந்திரம் இருக்கும். ரீமேக் எனும்போது ஒரு வட்டத்துக்குள் இயங்கியாக வேண்டும்.அதற்காக இருப்பதை அப்படியே எடுக்காமல் அதற்குள் தன்னுடைய எண்ணங்களையும் கொண்டு வந்து படத்தை மெருகேற்றினார். இந்தப்படத்தில் அவர் ஒரு காட்சியில் நடித்தார். அதற்கு இப்போது நல்ல வரவேற்பு. நான் படப்பிடிப்பின்போதே நன்றாக நடிக்கிறீர்கள், அடுத்த படத்தில் பெரிய ரோல் பண்ணுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
6.படப்பிடிப்புத் தளத்தில் அருண்பாண்டியன் தயாரிப்பாளராக நடந்துகொண்டாரா? நடிகராக மட்டும் இருந்தாரா?
அவர் ரொம்ப ரொம்ப தெளிவான மனிதர். நாங்கள் உள்ளே வரும்போது ஒரு தயாரிப்பாளரா வரவேற்று தேவையான எல்லாவற்றையும் செய்துகொடுப்பார். ஷாட் வைத்ததும் முழுக்க நடிகராக மாறிவிடுவார். இயக்குநருக்கு என்ன தேவையோ அதைச் சரியாகக் கொடுத்து அவர் திருப்தியடையவேண்டும் என்று கவனமாக இருப்பார்.
7.கீர்த்திபாண்டியனுக்கு நிறையப் பாராட்டுகள் கிடைக்க நீங்களும் ஒரு காரணம்.அவருடைய காட்சிகள் படமாக்கியது குறித்து..?
நல்ல நடிகர்களுக்குக் கூட எந்த இடத்தில் நிற்கவேண்டும் எவ்வளவு நகரவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தால் நினைவில் இருக்காது. அவர்கள் கவனம் எல்லாம் நடிப்பிலேயே இருப்பதால் அப்படி ஆகும். ஆனால் கீர்த்திபாண்டியன் வேடத்தை உள்வாங்கிச் சிறப்பாக நடிக்கவும் செய்வார். ஸ்பாட்டில் நாம் சொல்லும் விசயங்களையும் கவனமாகப் பின்பற்றுவார். மிகுந்த ஆற்றல் உள்ள நடிகை அவர். தொடர்ந்து படத்தேர்வில் கவனமாக இருந்தால் தமிழ் மட்டுமின்றி இந்திய நடிகையாக ஆகலாம். அதுமட்டுமல்ல பிரியங்கா சோப்ரா மற்றும் தனுஷ் போல் அவர் உலக அளவில் போகக்கூடிய திறமை உள்ளவர்.
8.விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகியது ஏன்?
என்னைப் பொறுத்தவரை ஓவ்வொரு பட உருவாக்கமும் ஒரு பயணம்தான். 23 படங்கள் வேலை செய்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமானவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். இந்தப்படத்திலும் பயணம் இனிமையாகத்தான் தொடங்கியது. போகப்போக கசப்பாகிவிட்டது. கசப்புடன் தொடரவேண்டாம் என விலகி வந்துவிட்டேன். இப்போதைக்கு இது போதும்.
9. மிஷ்கினோடு மீண்டும் சேராதது எதனால்?
இந்தக் கேள்வி என்னை நானே கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். அவர் எப்போதும் நல்ல நண்பர். சேர்ந்து இல்லாவிட்டாலும் என்னைப் பற்றி அவர் பல இடங்களில் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த திரைக்கலை மீதான அவர் பார்வை மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர் படம் தொடங்கும்போது நான் வேறு படங்களில் இருப்பதால் இணைந்து பணியாற்ற முடியாத சூழல். விரைவில் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என நினைக்கிறேன்.
10. அடுத்து பணிபுரியும் படங்கள் குறித்து..?
வைபவ், வாணிபோஜன் நடிக்கும் புதிய படத்தை ராதாமோகன் இயக்குகிறார். ஓடிடி தளத்துக்காகத் தயாராகும் அந்தப் படத்தை வைபவே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு 90 விழுக்காடு முடிந்திருக்கிறது.இன்னும் பத்துநாட்கள் படமாக்கப்படவேண்டும். இதற்கடுத்து புது இயக்குநர் வேலுமாணிக்கம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.
– அ.தமிழன்பன்