மதுமிதா சிக்கலால் வெளியான பிக்பாஸ் இரகசியம்
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்தநிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா, தன்னை காயப்படுத்திக்கொண்டதால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்துக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் செல்லும்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ஒப்பந்தத்தில் கூறியபடி ஏற்கனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார். மீதம் உள்ள பாக்கி தொகையை திருப்பி தருவதாகக் கூறி இருந்தோம். அதை ஒப்புக்கொண்டு அவர் சென்றார்.
இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு ‘வாய்ஸ் மெசேஜ்’ மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். அதில் “எனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை 2 நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டி உள்ளதாக அந்த புகாரில் கூறி இருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுமிதாவுக்கு சுமார் 30 இலட்சம் தரவேண்டியிருப்பதாகத் தெரிகிறது. அதைக் கேட்டதாலேயே இச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இச்சிக்கல் மூலமாக முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொள்பவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது என்கிற செய்தி சான்றுடன் நிரூபணமாகியுள்ளது.