ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்
மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி.
இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர் ரவிஅரசு. பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எத்தகைய அங்கீகாரம் இருக்கிறது என்பதைப் போகிற போக்கில் சொல்லி விளையாடுகிறார்.
பொறியியல் மாணவரான ஜி.வி.பிரகாஷ் புதுசு புதுசாக தினுசு தினுசாக தினம் ஒரு கருவியைக் கண்டுபிடிக்கிறார். கைதட்டிப் பாராட்ட வேண்டிய அரசு அதிகாரியோ கைநீட்டி வெளியே தள்ளுகிறார். ஆனாலும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயணிக்கிறார்.
அவரது அப்பா ஆடுகளம் நரேன் காவல்துறையில் பணிபுரிகிறார். ஆய்வாளர் ஆகும் கனவோடு கடமையே கண்ணாக தன் பணியை நேர்மையாகச் செய்துவருகிறார். ஆனால் காவல் துறையில் நடக்கும் சில நிகழ்வுகளால் காவலர் வேலை போதும் எனுமளவுக்கு மனம் வெம்பிப் போகிறார்.
இந்த நிலையில் ஒரு குழந்தை மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொள்கிறது. அப்போது தன் அறிவியல் மூளையைப் பயன்படுத்தி குழந்தையை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் வாய்ப்புக் கேட்கிறார். இறுதியில் ஜி.வி.பிரகாஷின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா? அவருடைய அப்பாவின் ஆய்வாளர் கனவு நிறைவேறியதா? என்பது மீதிக் கதை.
ஜி.வி.பிரகாஷ் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.வேடத்தின் பொறுப்புணர்ந்து நடித்து காட்சிகளுக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் காதலியாக மகிமா. மகிமாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லையென்றாலும் மனதில் நிற்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக வருகிறார் காளிவெங்கட். பழைய பேப்பர் வியாபாரி வேடத்தில் நடித்திருக்கும் காளிவெங்கட் நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
நகைத் திருடனாக வரும் சித்தார்த், ‘ஆடுகளம்’ நரேன், காவல் அதிகாரியாக வரும் ஹரீஷ்பேரடி ஆகியோர் நடிப்பு கச்சிதம்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு வித்தியாசமான கோணங்களால் விறுவிறுப்பைக் கொடுத்திருக்கிறார்.
யதார்த்தப் பார்வையில் சில பிழைகள் தெரிந்தாலும் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, குறைகளை மறக்கடித்து நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.
– சக்தி