அண்ணாத்த படக்குழு முடிவு – எனிமி படத்துக்குச் சாதகம்
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தையொட்டி ரஜினி நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் ஆர்யா ஆகியோர் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்ணாத்த படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. எனிமி படத்தின் வியாபாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு தவிர மற்ற விநியோகப்பகுதிகளுக்கான விநியோகஸ்தர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதனால் இப்போது, அப்படங்களுக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணி தொடங்கியிருக்கிறதாம்.
அதில், அண்ணாத்த படத்துக்காக திரையரங்குக்காரர்களிடம் வசூலில் எழுபத்தைந்து விழுக்காடு தொகையைத் தங்கள் பங்காகக் கொடுக்கவேண்டும் என்று ரெட்ஜெயண்ட் தரப்பில் கேட்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஐம்பது அல்லது அறுபது விழுக்காடு கேட்பார்கள் என்று நினைத்த திரையரங்குக்காரர்கள் எழுபத்தைந்து விழுக்காடு என்பதைக் கேட்டு அதிர்ந்திருக்கிறார்கள்.
அதனால், அண்ணாத்தவுக்குப் பதிலாக நாங்கள் எனிமி படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்களாம்.
இதுகுறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத திரையரங்குக்காரர் கூறியதாவது,,,
இது ரஜினி படம் என்பதற்காக எழுபத்தைந்து விழுக்காட்டுக்கு ஒப்புக்கொண்டால் அடுத்தடுத்து சூர்யா, தனுஷ் ஆகிய நடிகர்களின் படங்களை வெளியிடும் நேரத்திலும் இதே அளவு கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதால் இப்போதே இந்த அளவு பங்குத்தொகை என்றால் அண்ணாத்த படத்தைத் திரையிட வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறோம் என்கிறார்.
இந்த முடிவு எனிமி படக்குழுவுக்குச் சாதகமாகியிருக்கிறது என்கிறார்கள்.